நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 48 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கியூ பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேளாங்கண்ணி பேராலயப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சென்றுகொண்டிருந்த சிலரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் என்பதும், கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 48 பேரையும் சென்னை, கீழ்க்கட்டளையைச் சேர்ந்த (தமிழகத்தைச் சேர்ந்தவர்) முகவர் டேவிட் என்பவரையும் கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.