மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்தில் சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 2 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாகவும், நண்பகல் 2 மணியளவில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவும் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது.
இதனால் வியாழக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 30.44 அடி குறைந்தது. கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. அணை வரலாற்றில் மிகக் குறைந்த நீர்மட்டம் 1946ஆம் ஆண்டு 6.04 அடியாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.