300 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி சாவு

ஆரணி அருகே விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 4 வயதுச் சிறுமி 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். எனினும், உறுப்புகள் செயலிழந்ததால் வேலூர் அரசு மருத்துவமனையில் இரவு 8 மணியளவில் உயிரிழந்தார்.

ஆரணி அருகே விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 4 வயதுச் சிறுமி 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். எனினும், உறுப்புகள் செயலிழந்ததால் வேலூர் அரசு மருத்துவமனையில் இரவு 8 மணியளவில் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த புலவன்பாடி கிராமத்தில் சங்கரன் என்பவர் தனது நிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு 300 அடி ஆழ்துளைக் கிணறு அமைத்தார். தண்ணீர் வராததால் ஆழ்துளைக் கிணற்றை அப்படியே விட்டுவிட்டதாகத் தெரிகிறது.

அப்பகுதியில் உள்ள நிலத்தில் வேர்க் கடலை பயிர் எடுக்க விவசாயத் தொழிலாளர்கள் சனிக்கிழமை காலை சுமார் 8 மணி அளவில் சென்றனர். அதே பகுதியைச் சேர்ந்த பழனி-மலர்க்கொடி தம்பதியின் 4 வயது மகள் தேவி மற்றும் சிறுமிகள் நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தேவி தவறி உள்ளே விழுந்தார். தேவியின் அலறல் சப்தம் கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். ஆழ்துளைக் கிணற்றில் தேவி விழுந்ததை அறிந்து கூச்சல் போட்டனர். தாயார் மலர்க்கொடி சப்தம் போட்டு அனைவரையும் உதவிக்கு அழைத்தார்.

இதுகுறித்து போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்டது. மேலும் ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் ஆகியவை வரவழைக்கப்பட்டு ஆழ்துளைக் கிணறு அருகே பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.

மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியைக் காப்பாற்ற ஆக்சிஜன் வாயுவை உள்ளே செலுத்தினர்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியை மீட்கும் பணியை துரிதப்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், திருவண்ணாமலை எஸ்.பி. முத்தரசி, ஆரணி எம்.எல்.ஏ. பாபுமுருகவேல் ஆகியோரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் சிறுமியை மீட்க போராடினர். ஒருபுறம் ஆழ்துளைக் கிணற்றில் கயிறு மூலம் கொக்கியை உள்ளே செலுத்தி தூக்கலாம் என்று முயற்சி செய்தனர். அப்போது கயிறு அறுந்தது.

இதையடுத்து பள்ளம் தோண்டும் பணியை பொக்லைன் மூலம் தீவிரப்படுத்தினர். கற்கள் அதிக அளவில் இருந்ததால் சிறிது நேரம் கடப்பாரையால் தோண்டி கற்களை வெளியேற்றினர். இறுதியாக 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, 23 அடி ஆழத்தில் இருந்த சிறுமியை மாலை 6 மணியளவில் மீட்டனர்.

உடனடியாக தேவியை ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு தேவி கொண்டு செல்லப்பட்டார்.

சிறுமி சாவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆகியோர் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர். சிறுமி உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவமனை டீன் சிவகுமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இரவு 8 மணியளவில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை டீன் சிவகுமார் தெரிவித்தார். குழிக்குள் நீண்டநேரம் இருந்த சிறுமிக்கு போதிய ஆக்சிஜன் செல்லாததால், அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்துவிட்டன. இதனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் இத்தகவலை அறிந்து சோகத்தில் ஆழ்ந்தனர்.

உறுப்புகள் செயலிழந்ததால் காப்பாற்ற முடியவில்லை- ஆட்சியர் சங்கர்: தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு வருவது குறித்த தகவல் கிடைத்ததும், மருத்துவர் குழு தயார் நிலையில் இருந்தது. சிறுமியின் உயிரைக் காப்பாற்ற வெண்டிலேட்டர் மற்றும் ஷாக் சிகிச்சை உள்ளிட்ட முறைகளை டாக்டர்கள் குழு கையாண்டது. இருப்பினும் சிறுமியின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்து விட்டதால் டாக்டர்களின் முயற்சி பலனளிக்கவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com