சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அனுமதி இல்லாமல் நடைபெறும் புதிய மண்டபம் கட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை அவர் எழுதிய கடிதம்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள், புதிய மண்டபம் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது நடராஜர் ஆலயத்தின் பாரம்பரிய தன்மைக்கு சீர்குலைவை ஏற்படுத்தும். பாரம்பரியச் சின்னங்களை களங்கப்படுத்தும் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என்பதே நடைமுறையாகும். இந்த ஆலயத்தின் உள்ளே புதிய மண்டபம் கட்டுவதற்கான தேவை பல நூற்றாண்டுகளாக எழவில்லை.
புதிய கட்டுமானத்துக்காக அஸ்திவாரம் தோண்டுவதாலும் ராட்சத இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெறுவதாலும் பழமை வாய்ந்த கோயிலின் அடித்தளத்துக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
புதிய கட்டுமானத்தால் கோயிலுக்குள் நடைபெறும் திருவிழாக்கள், தரிசனத்தின்போது நெரிசல் ஏற்பட்டு பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த கட்டுமானப் பணிகளுக்கு உரிய அனுமதி பெறவில்லை. உரிய அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது சட்ட விரோதமாகும். எனவே, இந்த கட்டுமானப் பணிகளை நிறுத்தி, நடராஜர் ஆலயத்தின் பாரம்பரியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.