தமிழகத்தில் ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகளைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
16-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. தமிழகத்தில் முதல் முறையாக இந்தத் தேர்தலில் தான் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 39 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு 1.4 சதவீதம் அதாவது 5,82,062 வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், இந்தத் தேர்தலில் தலா 9 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 0.5 சதவீதம் அதாவது 2,20,614 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 0.5 சதவீதம் அதாவது 2,19,866 வாக்குகளும் கிடைத்துள்ளன.
புதிய தமிழகம் கட்சி 0.6 சதவீதம் (2,62,812), மனிதநேய மக்கள் கட்சி 0.6 சதவீதம் (2,36,679), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 0.5 சதவீதம் (2,05,896), ஆம் ஆத்மி கட்சிக்கு 0.5 சதவீதம் (2,03,175), பகுஜன் சமாஜ் கட்சி 0.4 சதவீதம் (1,55,964) வாக்குகளையும் பெற்றுள்ளன.
ஆம் ஆத்மி, புதிய தமிழகம் மற்றும் இடதுசாரி கட்சிகளைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
39 தொகுதிகளிலும் சுயேச்சையாக போட்டியிட்டவர்களுக்கு 2.1 சதவீதம் அதாவது 8,66,509 வாக்குகள் கிடைத்துள்ளன.