சிதம்பரம் நந்தனார் கல்வி கழகக் செயலாளரை நீக்கம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய செயல் தலைவராக ஏ.சங்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 1923 ஆண்டு சுவாமி சகஜாநந்தா, நந்தனார் கல்விக்கழகத்தை தொடங்கி, அதன் மூலம் நிதிவசூலித்து சிதம்பரம், காட்டுமன்னார்குடி தாலுக்கா உள்ளிட்ட ஒருங்கினைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்ட மக்கள் கல்வி வளர்ச்சியில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கில் இருபாலருக்கும் தனி தனியாக தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என நிறுவி ஆன்மிக மற்றும் சமூக சேவை செய்து வந்தார்.
இவரது மறைவுக்கு பிறகு நந்தனார் கல்வி கழகம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் கல்விக்குழு நிர்வகித்து வந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக சட்டப்பேரவையில் தாழ்த்தபட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்ட சுவாமி சகஜாநந்தாவிற்கு அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுவாமி சகாஜானந்தாவிற்கு மணி மண்டபம் அமைக்க ஆணை பிறப்பித்தார்.
இதனை அடுத்து மணி மண்டபம் நந்தனார் பள்ளி அருகே அவர் வாழ்ந்த இடத்திலே அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் அமைக்க இருந்த சில நீதிமன்ற தடைகளை சரிசெய்து மணிமண்டபம் கட்டுவதற்க்கான பணிகள் நடைபெற்றன. இதற்கு முரன்பாடாக செயல்பட்டு வந்த நந்தனார் கல்வி கழக செயலாளர் டி.ராமமூர்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த அனைத்து கல்விக்குழு ஊறுப்பினர்களும் பொதுக்குழுவை கூட்டமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் கல்விக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்விக்குழு உறுப்பினரும், புதுச்சேரி மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நீலகங்காதரன் தலைமை வகித்தார். கல்விக்குழு உறுப்பினர்கள் தொழிலதிபர் கே.ஐ.மனிரத்தனம், தாமோதரன், ராமநாதன், ஜெயச்சந்திரன், டி.கே.எம்.வினோபா, திலகவதி உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக செயலாளரின் செயல்பாடு முரண்பாடாக உள்ளதால், அவரை செயலாளர் பதவியில் இருந்து டி.ராமமூர்த்தி நீக்குவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கல்விக்குழு உறுப்பினர் டாக்டர் ஏ.சங்கரன் புதிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் வரும் கூட்டத்தில் மற்ற பொறுப்பாளர்களை நியமிப்பது என்றும், அதுவரை கல்விக்கழகம் சம்பந்தமான அனைத்து நிர்வாகத்தையும் புதிய செயல் தலைவர் நிர்வகிப்பார் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.