இணையதளம் மூலம் காவல்துறையில் புகார்கள் அளிக்கும் புதிய முறை புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கப்படும் என்று காவல்துறை ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன் தெரிவித்தார்.
மேலும் காவல்துறை சம்பந்தப்பட்ட கோப்புகள், காவல்நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து இணையதளம் மூலம் காவல்துறையினர் தெரிந்து கொள்ளும் இணையதளம் சனிக்கிழமை தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் எந்தவொரு காவல்நிலையத்தில் பதிவாகும் தகவல்களையும் பிற காவல்நிலையத்தில் பார்க்க முடியும். மேலும் குற்றவாளிகள் குறித்த விவரங்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட நாள், ஜாமீன் பெற்ற நாள் போன்ற தகவல்களையும் பார்க்க முடியும். காவல்நிலையத்துக்கு வந்த புகார்கள், பதிவான முதல் தகவல் அறிக்கைகள் ஆகியவற்றையும் பார்க்கலாம்.
இந்த சி.சி.டி.என்.எஸ். திட்டத்தின் அங்கமாக பொதுமக்களுக்கான இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் காவல்நிலையங்களுக்கு செல்லாமலேயே புகார்கள் அளிக்கலாம். இந்த புதிய வசதி வரும் திங்கள்கிழமையன்று தொடங்கப்படுகிறது.