காஞ்சிபுரம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறு வருவாய் துறை அதிகாரிகள் இன்று அகற்றினர்.
காஞ்சிபுரம் அருகே வையாவூர் சுப்பிரமணி நகரில், அரசுக்கு சொந்தமான இடத்தில், 3 அடி உயரமுள்ள உள்ள விநாயகர் சிலை பீடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. மேலும் அந்த பீடத்தை சுற்றி தகர சீட்டு போட்டு தடுப்பு அமைக்கப்பட்டது. அனுமதியின்றி அரசு புறம்போக்கு இடத்தில் கோயில் அமைக்கப்பட்டது குறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
அவர் உடனடியாக வருவாய் துறையினருடன் விநாயகர் சிலை பீடத்தை அகற்ற ஞாயிற்றுக்கிழமை விரைந்து சென்றார். மேலும் காஞ்சிபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், காவல் ஆய்வாளர்கள் சாரதி, லட்சுமிபதி உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி மக்கள் கோயிலை அகற்ற கடும் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் சிலைக்கு முன்பு சென்று நின்று கொண்டு சிலையை அகற்றவிடாமல் தடுத்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளை அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, விநாயகர் சிலையை அகற்றினர். மேலும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தையும், தகர சீட்டால் அமைக்கப்பட்ட செட்டையும் அப்புறப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து விநாயகர் சிலையை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் விநாயகர் சிலையை அகற்றும்போது தகராறில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 10 பேரை காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.