சாலவாக்கம் அருகே சித்தனக்காவூர் அம்பேத்கர் தெரிவில் சிமென்ட் சாலையை காணவில்லை என்று அக்கிராம பொதுமக்கள் குறைதீர்க் கூட்டத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சௌரிராஜன் தலைமை வகித்து கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் உத்தரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அருகே சித்தனக்காவூர் ஊராட்சி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த கா. நாகராஜ் தலைமையில் கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: சித்தனக்காவூர் கிராமத்தில் அம்பேத்கர் தெருவில் நாங்கள் வசித்து வருகிறோம். இந்த தெருவில் கடந்த 2013 - 2014-ஆம் ஆண்டில் தாய் திட்டத்தின் சிமென்ட் சாலை அமைக்க ரூ. 3.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இந்த தெருவில் சாலை அமைக்கவில்லை.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய பொது தகவல் அலுவலரிடம் கேட்டிருந்தேன். அவர் அளித்த தகவலின்படி சித்தனக்காவூர் ஊராட்சி அம்பேத்கர் தெருவில் கடந்த 2014 நவம்பர் 14-ஆம் தேதியே ரூ. 3,56,359 செலவில் சிமென்ட் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டதாகவும், அதற்கான தொகையை ஒப்பந்ததார் இரா. புனிதன் ஆலஞ்சேரிக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணியின் புகைப்படத்தை எனக்கு வழங்க மறுத்துவிட்டனர்.
இதன் மூலம் அம்பேத்கர் தெரிவில் சிமென்ட் சாலை போடாமலேயே சாலை போட்டுவிட்டதாக அதிகாரிகள் தகவல் தருகின்றனர். இன்று வரை அங்கு செடி, கொடிகள் நிறைந்த மண் சாலையாகவே உள்ளது. எனவே சாலை போட்டதாக் கூறப்படும் சிமென்ட் சாலையை கண்டுப்பிடித்து தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.