திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தர்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் முத்துப்பேட்டை அம்மாபள்ளி தர்கா மீது புத்தாண்டு நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தர்காவுக்கு தினமும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வருகின்றனர். இதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தர்காவின் உள்ளே நுழைய முடியாதவர்கள் சுற்றுச் சுவரை உடைத்துள்ளனர். இதை அறிந்து பொதுமக்கள் திரண்டு வந்தவுடன் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒருவரின் ஆதரவாளர்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முத்துப்பேட்டை காவல் துறை கண்காணிப்பளரின் செயல் இந்த வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தர்கா மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.