சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் தமிழக மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அதிமுக தொண்டர்கள் உருக்கத்தோடு கூறுகின்றனர்.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த அக்டோபர் 28ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றில் இருந்து தொடர்ந்து 78 நாட்களாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் பூரண குணம் அடைந்து விட்டார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மருத்துவமனை அறிவித்தது.
இதனால், தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகினர்.
ஆனால், இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றைய நாள் முதல் அதாவது சரியாக 78 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி, அவர் உடல் நலன் பெற தொடர்ந்து பிரார்த்தித்து வரும் தொண்டர்கள் கூறுவது என்னவென்றால், "அம்மா நல்லாயிருக்காங்க" என்பதுதான்.
"தமிழக முதல்வரும், புரட்சித் தலைவியுமான ஜெயலலிதா அம்மா நல்லாயிருக்காங்க. அவங்களுக்கு ஒன்றும் ஆகாது. தமிழக மக்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார்" என்று நம்பிக்கையோடும் உறுதியோடும் கூறுகிறார்கள்.