திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எஸ்பி., சாம்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் அமைய உள்ள இடங்களை தீயணைப்பு துறை, மாவட்ட நிர்வாகம், போலீசார் என பல தரப்பில் ஆராயப்பட்டு, பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக உரிமம் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே செல்லத்தக்கது.
மேலும், தடையை மீறி இம்மாவட்டத்தில் சீன பட்டாசுகளை விற்பனை செய்தால் பட்டாசு கடைகள் அமைக்க வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.