மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால், அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க மறுத்து, அங்குள்ள அணைகளை மூடிவிட்டது.
இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை வினாடிக்கு 634 கன அடியாகக் குறைந்தது. நீர்வரத்து சரிந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை 84.34 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், திங்கள்கிழமை காலை 83.39 அடியாகக் குறைந்தது. நீர்வரத்தைவிட காவிரி டெல்டா பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 45.41 டி.எம்.சி. மேட்டூர் அணையின் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதால், காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.