திரையரங்குகளில் குளிர்பானம், குடிநீர், உணவுப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த ஏப்ரலில், எனது குடும்பத்தினருடன் பெரம்பூரில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கச் சென்றேன். படத்தின் இடைவேளையில் திரையரங்கு வளாகத்திலுள்ள உணவகத்தில் 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டிலை வாங்கினேன். இதற்கு விலையாக ரூ.30 பெற்றுக் கொண்டனர். அதேபோல், 400 மி.லி. கொள்ளளவு கொண்ட குளிர்பானத்துக்கு ரூ.65 வாங்கிக் கொண்டனர்.
குளிர்பான நிறுவனம் நிர்ணயித்த சந்தை விலையை விட, பன்மடங்கு அதிகமாக திரையரங்கில் அமைக்கப்பட்ட உணவகத்தில் வசூலிக்கின்றனர். கூடுதல் விலை தொடர்பாக, சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு உரிய பதில் தர மறுத்தனர். அதேபோல், குடிநீர், குளிர்பானம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டேன்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், காபி, குடிநீர், உணவுப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த முறைகேடுகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம். சத்தியநாராயணன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் குளிர்பான நிறுவனம், திரையரங்கு நிர்வாகம், தமிழக அரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.