சென்னை: திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண எதிர்க் கட்சியான எங்களுக்கு எந்த அளவுக்கு பொறுப்பு இருக்கிறதோ, அதே அளவு பொறுப்பு ஆளும் கட்சியான அதிமுக-வுக்கும் உள்ளது. எனவே, அவர்களும் பிரதமரைச் சந்திக்க வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன்: முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க அனைத்து தரப்பு மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், வணிகர்களுக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் அழைப்பு விடுத்திருக்கிறது.
இரா.முத்தரசன்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை மக்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களின் ஆதரவையும் பெற்று வெற்றிபெறச் செய்வதற்காக வருகிற 22 ஆம் தேதி விளக்கப் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்போம்.
தொல்.திருமாவளன்: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வருகிற 25-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை, ஒரு குறிப்பிட்ட அரசியல் அணியின் அழைப்பு என்று பாராமல், ஒட்டு மொத்த தமிழக மக்களின் பிரச்னைக்கான போராட்டம் என்பதை உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.