புதிதாக தொழில் தொடங்குவோரை ஊக்கப்படுத்தவும், ஆதரவு அளிக்கவும் ரூ.500 கோடி வரை ஒதுக்கும் திட்டம் உள்ளது என்று தமிழக சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தொழில்முனைவோர் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி சென்னையில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. கருத்தரங்கில் முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா பேசியது:
தமிழகத்தில் சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. இதை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தொடக்கத்தில் ரூ.50 கோடி, அதன் பிறகு ரூ.100 கோடி கொடுத்து ஊக்கப்படுத்தும் திட்டம் உள்ளது என்றார்.
கருத்தரங்கில் தொழில்முனைவோர் தலைவர் ஆனந்த் சுரானா பேசும்போது, கீழ் நிலையில்
இருப்பவர்கள் மேலே வருவதற்கு தொழில்முனைவோர் ஊக்குவிப்பு பெரும் உதவியாக உள்ளது. தொழில்முனைவோர் வளர்ச்சியில் தமிழகம் 4-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தரமான தொழில்முனைவோர் உள்ளனர். அவர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்களை ஊக்குவித்தால் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூருக்கு அடுத்து இரண்டாம் இடத்துக்கு தமிழகம் வந்துவிடும் என்றார் அவர்.
கருத்தரங்கில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழக தலைவர் பி.ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றுப் பேசினர்.