சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்த கார்த்திகேயன்-சின்னத்திரை நடிகை மைனா நந்தினி ஆகியோர் திருமணம் முடித்து சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரைப் பிரிந்து அவரது தந்தை வீட்டில் நந்தினி வசித்து வந்தார். இதில் மனமுடைந்த கார்த்திகேயன், கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி விருகம்பாக்கம் விடுதி ஒன்றில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 'தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என்று கோரி கார்த்திகேயனின் தாய் சாந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி விருகம்பாக்கம் காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.