திருப்பூர் அருகே மதுக் கடைக்கு எதிராக போராடியவர்களை போலீஸார் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் அருகில் உள்ள முதலிபாளையம் சிட்கோ தொழில் மையத்தில் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுக்கடைக்கு எதிரான நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 90 பெண்கள் உட்பட 234 பேர்களை கைது செய்த காவல்துறை, அதில் 24 பேரை தனிமைப்படுத்தி வழக்குப் பதிவுசெய்து மத்திய சிறையில் அடைத்துள்ளது.
காவல்துறையின் ஜனநாயக விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். மதுவிலக்கு குறித்து தமிழக அரசு தனது கொள்கை நிலையை திட்டவட்டமாக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.