அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 100 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றனர்.
மழை: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 100 மி.மீ., நீடாமங்கலம், போளூர், காங்கேயம் மற்றும் வாணியம்பாடியில் தலா 80 மி.மீ., மன்னார்குடி, திருப்பத்தூர், அரிமலம், பேராவூரணி மற்றும் சேலத்தில் தலா 70 மி.மீ., ஆலங்காயத்தில் 60 மி.மீ., மழைப் பதிவானது. சாத்தனூர், சமயபுரம், ராயக்கோட்டை, செஞ்சி, கறம்பக்குடி, சங்கராபுரம், திண்டுக்கல், உசிலம்பட்டி, பாளையங்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை 5 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக திருச்சி, கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் தலா 101 டிகிரி வெயில் பதிவானது.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
திருச்சி, கரூர் பரமத்தி, வேலூர் 101
கடலூர், திருத்தணி 100
சென்னை (மீனம்பாக்கம்) 98