தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அரசு மதுக்கடை மேற்பார்வையாளரைத் தாக்கி ரூ. 1.93 லட்சத்தை வியாழக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
ஒரத்தநாடு வட்டம், மேல ஊளூரைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் குமார் (48). இவர் தொண்டராம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மதுக்கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை இரவு தான் பணிபுரிந்த மதுக்கடையில் வியாபாரம் செய்தவகையில் இருந்த ரூ. 1.93 லட்சத்தை எடுத்துக்கொண்டு கடையை மூடிவிட்டு, தன்னுடன் விற்பனையாளராகப் பணியாற்றும் ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தொண்டாரம்பட்டில் இருந்து ஒரத்தநாடு வந்துள்ளார்.
பிறகு, ஒரத்தநாட்டில் இருந்து குமார் மட்டும் தனியார் பேருந்தில் ஏறி, தனது சொந்த ஊரான மேலஉளூருக்கு ரூ. 1.93 லட்சத்துடன் சென்றுள்ளார்.
மேலஉளூரில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் குமாரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனராம்.
தாக்கப்பட்டதில் காயமடைந்த குமார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில், ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.