பள்ளிக் கல்வித் துறை சார்பில் இணையதளம் மூலம் கடந்த இரு நாள்களாக நடைபெற்ற கலந்தாய்வில் 217 தலைமை ஆசிரியர்கள், 436 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள காலிப்பணியிடங்கள் என, 217 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.10) நடைபெற்றது.
இந்தப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பணியிடங்களை தேர்வு செய்து பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஆக.11) நடைபெற்ற கலந்தாய்வில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற 436 ஆசிரியர்களுக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப பணியிடங்களை தேர்வு செய்து பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.