திருத்தணியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
திருத்தணி ஜி.ஆர்.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் என 18 வகையான போட்டிகள் நடைபெற்றன.
பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்று, விளையாடினர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதன் நிறைவு விழாவுக்கு ஜி.ஆர்.டி. கல்விக் குழுமத் தலைவர் ஜி.ராஜேந்திரன், அவரது மகள் டாக்டர் ஜெய்ஸ்ரீ ராஜேஷ், ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ஞானசேகரன் (பொறுப்பு), பள்ளி கல்வி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நசரத் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வீரதனலட்சுமி வரவேற்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை ஜி.ஆர்.டி. மகாலட்சுமி வித்யாலயா மெட்ரிக். பள்ளி முதல்வர் வைதேகி கிருஷ்ணன், திருத்தணி ஜி.ஆர்.டி. பொறியியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஷர்மிளா, திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.