ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடல் பகுதியில், சனிக்கிழமை மாலை வெள்ளைப் புள்ளி சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியிருந்தது.
வேதாளை கடற்கரையோரம் வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய சுறா மீன் ஒன்று கரை ஒதுங்கி இருந்ததை, அப்பகுதியினர் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பின்னர், அந்த மீனை பாதுகாப்பாக ஒரு நாட்டுப் படகில் ஏற்றி சுமார் 2 கி.மீ. தொலைவு வரை சென்று கடலில் விட்டனர்.
இது குறித்து வனச்சரகர் சதீஷ் கூறியது:
100 கிலோ எடையும், 10 அடி நீளமும் உடைய இந்த சுறா மீன், பெண் இனத்தைச் சேர்ந்தது. சுமார் 5 வயதே இருக்கும் இந்த சுறாவின் உடலின் மேற்புறத்தில் வெள்ளைநிறப் புள்ளிகள் உள்ளன.
என்ன காரணத்தால் இந்த மீன் கரை ஒதுங்கியது எனத் தெரியவில்லை. இருப்பினும், நாட்டுப் படகில் பாதுகாப்பாக எடுத்துச்சென்று கடலில் விட்டவுடன் துள்ளிக் குதித்து சென்றுவிட்டது என்றார்.