நாடு முழுவதும் திங்கள்கிழமை (ஆக.14) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன்: "அறம் பிறழ்ந்து, அநீதி தழைத்தோங்கும் அபாயம் நிகழும் போது இவ்வுலகில் நான் அவதரிப்பேன்' என்றுரைத்த பகவான் கிருஷ்ணரின் ஜெயந்தி திருநாளாகிய இத்தித்திப்பு நன்னாளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் சகலரிடமும் சகோதர பாசமும், உயர்வு, தாழ்வு கருதா சமத்துவ நோக்கமும் பெருகி இவ்வையகம் இன்புற்று வாழ்ந்திட உளமாற வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கிருஷ்ண பரமாத்மா துரியோதனை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியது மகாபாரதம் சொல்லும் வீரவரலாறு. கிருஷ்ணரை நினைத்தாலே இன்னல்கள் நீங்கும் என்பது தமிழக மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிலைக்கவும், நாட்டில் தலைதூக்கும் அதர்மம் அழிந்து தர்மம் தழைக்கவும், தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.