ராஜபாளையம் அருகே 40 நாள் குழந்தையை கொன்று கணவர் வீட்டில் போட்டுச் சென்ற மனைவியையும், அவரது தாயாரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூர் கண்ணன் மகள் ராமலட்சுமி (19) என்பவருக்கும், சிவகிரியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே ராமலட்சுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த கோபி, ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் ராமலட்சுமியிடம் விசாரித்ததில், தனது ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் நெருங்கி பழகியதால் தான் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் போலீஸார் கருப்பசாமியை அழைத்து சமரசம் செய்ததால், ராமலட்சுமியை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு முத்தாநதி என்ற ஊரில் வசித்து வந்தனர். இந்நிலையில், 40 நாட்களுக்கு முன்னர் ராமலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், பெண் குழந்தை என்று அறிந்த கருப்பசாமி குழந்தையையும், மனைவியையும் பார்க்க வராமல் தன் அம்மா வீட்டில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமலட்சுமியின் தாயார் முத்து, தன் மகளுக்கு மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால், இதற்கு குழந்தை இடையூறாக இருக்கும் எனக் கருதி ராமலட்சுமியும், முத்துவும் சேர்ந்து பிறந்து 40 நாளேயான குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து, அதை கருப்பசாமி வீட்டில் தொட்டில் கட்டி, போட்டுவிட்டு, ராமலட்சுமி தன் தாலியையும் கழற்றி அதில் போட்டுச் சென்றுள்ளார்.
வீட்டுக்கு வந்த கருப்பசாமி, தன் வீட்டில் குழந்தை இறந்து கிடப்பதை அறிந்து, தளவாய்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து ராமலட்சுமி, அவரது தாய் முத்து ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனர்.