சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமான சேவையை வரும் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என தென்மண்டல ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் அருள்மணி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் விமாத்தில் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு சிறிய ரக விமானம் வருகிற 30 ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட உள்ளது. இதில் 70 பேர் பயணம் செய்ய முடியும்.
ஒரு நாளைக்கு ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே விமான சேவை அளிக்க இயலும். மேலும் சிறிய ரக விமானங்கள் வந்தபின்னர் காலை, மாலை என தினமும் 2 முறை விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும். பயணம் செய்ய உள்ள தினத்தில் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும்.
இதுதவிர தூத்துக்குடி, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும். பயணிகளின் ஆதரவை பொறுத்தே விமான சேவை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.