தேனி: திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே போஸ். இன்று தேனியில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்
தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களுடன் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைந்த பிறகு ஏகப்பட்ட பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என 3 பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிமுகவின் பன்னீர்செல்வம்-பழனிசாமி அணிகள் ஒன்றாக இணைந்தன. இதையடுத்து தினகரனையும், சசிகலாவை ஒதுக்கிவைக்க நிர்பந்தித்துவிட்டு ஓபிஎஸ் கட்சிக்கு மீண்டும் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர்.
இந்நிலையில் 19 பேரும் புதுவையில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். தாங்கள் அளித்த மனுவுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரையில் விடுதியிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நேற்று தினகரனுக்கு அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதியும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ கலைசெல்வனும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்தது.
இந்நிலையில் தேனியில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே. போஸ் தேனியில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து போஸ் கூறுகையில் சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சி செய்ய முடியாது. தினகரன் அணிக்கு மேலும் பல எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்றார் தெரிவித்துள்ளார்.