திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் உதகையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்துள்ள ரகசியத் தகவலை அடுத்து தனிப்படை போலீஸார் உதகையில் முகாமிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் ஹைதராபாதில் பதுங்கிஇருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் அங்கு செல்வதற்குள் அன்புச்செழியன் தப்பி பெங்களூருவுக்குச் சென்றுவிட்டாராம். அதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் பெங்களூருவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கிருந்தும் அவர் தப்பி மைசூர் வழியாக உதகைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
உதகையில் பிரபல தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்பட நடிகர், நடிகையருக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட பங்களாக்கள் உள்ளன. அன்புச்செழியனைப் பொருத்தவரை திரைப்படத் துறையில் அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர் என்பதால், இந்த பங்களாக்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது தமிழக-கர்நாடக எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளிலோ அவர் தங்கி இருக்கலாம் எனக் கூறப்படுவதால் தனிப்படை போலீஸார் தற்போது உதகையில் முகாமிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ளூர் காவல் துறையினரின் உதவி இல்லாமல் அவர்களே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியே தெரியவில்லை என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.