முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் பாலாஜியிடம் நீதிபதி ஆறுமுகசாமி வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது தமிழக அரசு சார்பில் மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் ஆறுமுகசாமி முன்பு அரசு மருத்துவர் பாலாஜி, நீரிழிவு நோய் நிபுணர் தர்மராஜன் ஆகியோர் வியாழக்கிழமை காலை ஆஜராகினர்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்தவர் மருத்துவர் பாலாஜி. ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாகவும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும் அவரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் வரும் 27-ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.