சென்னை: தொப்பி சின்னத்தை தனக்கு ஒதுக்கும்படி விடுத்த கோரிக்கையை தேர்தல் அலுவலர் நிராகரித்ததை அடுத்து, டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்காது என்பது உறுதியானது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட இடைத் தேர்தலில், டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்த நிலையில், இந்த இடைத் தேர்தலிலும் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி வழக்கும் தொடர்ந்தார்.
அதே சமயம் பல சுயேச்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னம் கேட்டதால், அனைத்து சுயேச்சைகளுக்கும் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.
ஆனால், சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கிய பிறகு, பதிவு செய்யப்பட்ட கட்சிகளான நமது கொங்கு முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்தி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய 3 கட்சியின் வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியிருக்கின்றனர்.
சின்னம் ஒதுக்குவதில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை என்பதாலும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் தான் சின்னம் ஒதுக்கப்படும் என்று அறிவித்திருப்பதாலும், தொப்பி சின்னம் டிடிவி தினகரனுக்குக் கிடைப்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு தொப்பி சின்னம் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அலுவலர் அறிவித்தார். அதோடு, தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.