திருநெல்வேலியில் பழக்கடை அதிபர் வீட்டில் பெண்ணை கட்டிப் போட்டு 200 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை கொள்ளை அடித்துச் சென்றனர். வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவிடும் கருவியையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு பெருமாள் வடக்கு ரத வீதியை சேர்ந்த தங்கத்துரை பழ மண்டி அதிபர். மாநகரில் பல இடங்களில் பழக்கடைகள் நடத்தி வருகிறார். தங்கத்துரை மனைவி காந்திமதி (35). செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வேலைக்காரி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாராம். வீட்டில் காந்திமதி தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் இருவர், பழக்கடையில் இருந்து வருவதாகத் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் சென்ற அவர்கள், துணியால் காந்திமதி வாயைப் பொத்தி கட்டிப் போட்டனர். வீட்டிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த சுமார் 200 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்தனர். வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவிடும் கருவியையும் எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர். வீட்டின் முன்பக்க கதவை கொள்ளையர்கள் வெளிப்பக்கமாக தாழிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், தங்கத்துரை வீட்டில் இருந்து முனகல் சத்தம் கேட்பதை அறிந்து, அக்கட்டடத்தின் மாடியில் வசித்து வரும் காந்திமதியின் உறவினர் அங்கு வந்தார். வீட்டை அவர் திறந்தபோது, கொள்ளை நடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த மாநகர காவல் உதவி ஆணையர்கள் வரதராஜன், மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளையர்கள் கட்டிப் போட்டதால் காயமடைந்த காந்திமதி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பெருமாள் வடக்கு ரதவீதி முனையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், கொள்ளை நடந்த நேரத்தில் அந்த வீட்டின் முன்பிருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்தப் பதிவை வைத்து கொள்ளையர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.