விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செவ்வாய்கிழமை அதிகாலை ரேஷன் கடையைத் திறந்து 180 அரிசி மூட்டைகளை கடத்திய மூவரை போலீஸார் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, வேன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பலரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டம், மம்சாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ப.பிரவின்குமார், தலைமைக் காவலர் இசக்கிராஜ் ஆகியோர் செவ்வாய்கிழமை அதிகாலை மம்சாபுரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
க்யூ 1189 மம்சாபுரம் 1 கூட்டுறவு பண்டகசாலைக்குச் சொந்தமான, இந்திராநகரில் உள்ள நியாயவிலைக் கடை எண் 2 உள்ளது. இக் கடையின் விற்பனையாளராக வி.ரேணுகா உள்ளார். இக் கடையைத் திறந்து லாரியில் 11 பேர்கள் சேர்ந்து 80 மூட்டை அரிசியை ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார்கள். அப்போது காவல் துறையினரை கண்டதும் ஓட முயன்றுள்ளார்கள். இவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்த ஏசுக்கனி மகன் டேவிட் ஆசீர்வாதம் (26), மம்சாபுரம் சண்முகநாதன் மகன் பிரபாகரன் (29), எம்.பி.கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் முருகேசன் (33) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மூட்டைகள் ஏற்பட்ட லாரி மற்றும் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மூவரையும் போலீஸார் விசாரித்ததில், இவர்கள் ஏற்கனவே கடத்திய 80 மூட்டை ரேஷன் அரிசி வேனுடன் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் உள்ள லாரி எடை போடும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதன் பேரில் இந்த வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறும் இந்த சங்கத்தில் உள்ள 4 கடைகளுக்கு மேலாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உள்ளார். இவர் தான் கடைகளை இரவு நேரங்களில் திறந்துவிட்டு அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த அரிசியை கேரளாவிற்கு விற்பனை செய்யும் வியாபாரி ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி தெருவைச் சேர்ந்த கலைச்செல்வன் (35) என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடிமைப் பொருள் உணவு பாதுகாப்புப் பிரிவு போலீஸார் தப்பி ஓடிய 8 பேர் மற்றும் கடைகளின் மேலாளர் ரமேஷ், வியாபாரி கலைச்செல்வன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வருகிறார்கள். டேவிட் ஆசீர்வாதம் (26), பிரபாகரன் (29), முருகேசன் (33) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இப் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாய் போலீஸார் கூறினர்.