கடலூர் மாவட்டம், வடலூர் அருகே அரசுப் பேருந்தும், காரும் புதன்கிழமை நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுச்சேரி தலைமைச் செயலக ஊழியர் உள்பட மூவர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி மாநில தலைமைச் செயலகத்தில் பணியாற்றுபவர் லட்சுமிநாராயணன். இவரது வீட்டு விஷேச நிகழ்ச்சி கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் செல்வமணி, ஆசிரியர் ஒப்பிலியப்பன், முருகன் ஆகிய மூவரும் கும்பகோணம் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து மூவரும் காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். காரை செல்வமணி ஓட்டினார்.
வடலூரை அடுத்த மருவாய் கிராமம் பரவனாற்றுப் பாலம் அருகே கார் வந்த போது, சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செல்வமணி, முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஆசிரியர் ஒப்பிலியப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்து குறித்து வடலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.