மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
சுமார் 75 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தார்.
சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சிறந்த மருத்துவச் சிகிச்சையும், இயன்முறை மருத்துவமும் அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் தொடர்ந்து, முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. அவர் தெளிவாக இருந்தார். ஆனால், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட ஒரு நிமிடத்தில்தான் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டது. எங்களைப் பொருத்தவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்பது திறந்த புத்தகமாகவே உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகள் குறித்தும் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அவருடைய 2 கால்களும் அகற்றப்பட்டன என்பதெல்லாம் வெறும் வதந்தியே என்றார் அவர்.