முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தமிழக அரசு அனுமதியின்றி, 13 இடங்களில் செயற்கைக்கோள் தானியங்கி மழைமானி பொருத்தும் பணியில், கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்சுருளி, முல்லைக்கொடி, தானிக்குடி, வல்லக்கடவு, பச்சக்கானம், மணலாறு, மேப்பாறை, கரடிப்பாறை உள்ளிட்ட 13 இடங்களில் செயற்கைக் கோளால் இணைக்கப்பட்ட தானியங்கி மழைமானி பொருத்தும் பணியில், கேரள நீர்ப் பாசனத் துறையின் செயற் பொறியாளர் ஜார்ஜ் டேனியல், கேரள பொதுப்பணித் துறையின் மின்னியல் துறை செயற் பொறியாளர் அனிதா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தானியங்கி மழைமானி, ஹைதராபாத்திலுள்ள செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும். இங்கிருந்து மழையளவு, காற்றின் ஈரப்பதம், காற்று அடிக்கும் வேகம் ஆகியவற்றை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கேரள நீர்ப்பாசனத் துறைக்கு தகவல் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.