மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதாவை நான் எப்படி பார்த்துக் கொண்டேன் என்பது மருத்துவமனையில் உள்ளோருக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தனியார் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை பேட்டி அளித்தார். அதன் விவரம்: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்ட போது, பாதுகாப்புப் பணியில் இருந்த துணை கண்காணிப்பாளரை உதவிக்கு அழைத்தேன். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம். அவரை சீக்கிரம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டீர்கள் என மருத்துவர்களே தெரிவித்தனர். எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான எந்த விசாரணைக்கும் நான் தயார். அதுபற்றி கவலையில்லை.
எனது சகோதரியாக இருந்த ஜெயலலிதாவுக்குத் தெரியும். அவரை நான் எப்படி பார்த்துக் கொண்டேன் என்று. எங்களுக்கு மனதில் பயமில்லை.
ஆனால், இவ்வளவு நாள்கள் எங்களுடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்கிறார்.
அதை நினைத்து வருத்தப்படுகிறேன். துரோகியாக இருந்திருக்கிறார் என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன் என்றார் சசிகலா.