அஞ்செட்டி அருகே யானை சறுக்கி விழுந்து சாவு

அஞ்செட்டி அருகே தண்ணீர் குடிக்க வந்த யானை சறுக்கி விழுந்ததில் உயிரிழந்தது.

அஞ்செட்டி அருகே தண்ணீர் குடிக்க வந்த யானை சறுக்கி விழுந்ததில் உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட பிலிகுண்டு வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இதில் 20 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று நோயால் அவதிப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்த யானை தாகம் தணிக்க அந்தப் பகுதியில் உள்ள ஒரு குட்டைக்கு புதன்கிழமை மாலை வந்தது. அங்கு தண்ணீரைக் குடித்த யானை திரும்பிச் சென்ற வழியில், மேடான பகுதியில் ஏற முயன்றதாம். அப்போது ஏற முடியாமல் அது சறுக்கி கீழே விழுந்ததாம்.
மேலே எழ முடியாமல் அந்த யானை பிளிறியதை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், அஞ்செட்டி வனச் சரகர் தனபால், வனவர் பெரியசாமி, வனக் காப்பாளர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது அந்த யானை இறந்து கிடந்தது. இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட வன மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அங்கு சென்று, இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு அருகிலேயே குழி தோண்டி யானை புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com