சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணத் தண்டனை விதிக்க வேண்டும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), கடந்த ஜனவரி 14ஆம் தேதி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் கிணற்றில் வீசப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நந்தினி குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் அளித்தப் பேட்டி:
நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். உயிரிழந்த நந்தினியின் குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்கவும், பாதுகாப்பு வழங்கிடவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் நந்தினி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை ஒரு கட்சி சார்ந்தது அல்ல; ஏழரை கோடி மக்கள் சார்ந்த பிரச்னையாகும்.
இதில் உரிய முடிவெடுக்க ஆளுநருக்கு போதிய அவகாசம் தேவைப்படுகின்றது. ஆளுநர் எடுக்கும் முடிவு நடுநிலையானதாக இருக்கும் என்றார் அவர்.
முன்னதாக அவர், நந்தினி வீட்டில் உணவருந்தி, சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.