கள்ளக்குறிச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசுப் பேருந்தின் பின் சக்கர டயர்கள், திடீரென உடைந்து கழன்று ஓடின. இதனால், ஏற்பட்ட விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியிலிருந்து அருகேயுள்ள நின்னையூர் கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்து வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலை சென்று விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. பேருந்தை சடகோபன் ஓட்டி வந்தார்.
உளுந்தூர்பேட்டை-கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் பகல் 12 மணியளவில், தியாகதுருகம் அடுத்துள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது, அப்பேருந்தின் இடதுபுற பின் சக்கரத்தின் 2 டயர்களும் திடீரென அச்சுடன் உடைத்துக்கொண்டு கழன்று ஓடின.
இதனால், அந்த பேருந்து நிலைகுலைந்து சாலையோரம் சாய்ந்தது.
இந்த விபத்தில், பேருந்தில் வந்த நின்னையூரைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி வள்ளி (30), அரியன், அருணா, மாரிமுத்து உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.