முதல்வர் பதவிக்கு சசிகலாவை ஆதரிக்குமாறு எம்எல்ஏக்களிடம் கூறியதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், தில்லியில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எந்த கருத்து மோதல்களும் நிகழவில்லை.
அரசியல் சூழ்நிலைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தார். இதில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேரும் சசிகலாவை முதல்வராக வாக்களிக்க வேண்டும் என நான் (திருநாவுக்கரசர்) வற்புறுத்தியதாக வந்த செய்திகள் விஷமத்தனமானது. உண்மைக்கு மாறானது. அதிமுக உள்கட்சி விவகாரங்களில் காங்கிரஸ் தலையிடாது. காபந்து அரசுக்குப் பதிலாக முழுமையான அரசையும், முதல்வரையும் தேர்வு செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு தலையிட்டு சுய அரசியல் லாபத்துக்காக குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. யார் முதல்வராக வர வேண்டும் என்பது அதிமுக எம்எல்ஏக்களின் விருப்பம் - முடிவு. மக்கள் மனநிலை, எம்எல்ஏக்களின் ஆதரவு, அரசியல் சட்டம், சட்டப் பேரவை - நாடாளுமன்ற விதிமுறைகள் இவற்றைப் பின்பற்றி ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.