சென்னை: ஜெயலலிதாவால் ஏற்கனவே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்த பொன்னையன், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சின்னம்மா என்கிற சசிகலாவைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை.
சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் மக்கள் பிரதிநிதிகள். எனவே, மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே அவர்கள் செயல்பட வேண்டும் என்பது கடமை.
கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் தொண்டர்களின் விருப்பப்படி நல்ல தலைமையின் கீழ் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஏற்கனவே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதா பொறுப்பில் இருக்க முடியாத போதெல்லாம், அண்ணாவைப் போல மிகுந்த அடக்கத்தோடு பணியாற்றியவர் பன்னீர்செல்வம் என்று கூறினார்.
வர்தா புயலின் போது புயலை விட வேகமாகப் பணியாற்றியவர் பன்னீர்செல்வம் என்றும் பொன்னையன் புகழாரம் சூட்டினார்.