தாராபுரத்தில், மனைவியுடன் ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நடுபஜனை மடத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி தேன்மொழி (55). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் ஆறுமுகமும், தேன்மொழியும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தாராபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஆறுமுகமும், மனைவி தேன்மொழியும் விஷ மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகம் எழுதி வைத்துள்ள கடிதத்தில், அவர்களது தற்கொலைக்கு உறவினர்கள் சிலரே காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடிதத்தைக் கைப்பற்றிய தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.