தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு மாநில சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் (அட்டார்னி ஜெனரல்) முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்துள்ளார்.
மாநிலத்தை ஆளும் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டதன் காரணமாக தமிழக அரசியல் களத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவா? அல்லது முதல்வர் பன்னீர் செல்வமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்தி வருவதாக சசிகலா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசியல் சூழல் குறித்து முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ஸ்திரமற்ற அரசியல் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பது முகுல் ரோத்தகியின் கருத்தாக உள்ளது.
அந்தக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் நம்புகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.