சட்டப் பேரவை வளாகத்தில், காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் புதன்கிழமை (பிப்.15) இரவு திடீரென ஆய்வு நடத்தினர்.
பேரவை வளாகத்தின் நுழைவு வாயில்கள், வெளியேறும் பாதைகள் உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையாலும், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சட்டப் பேரவை கூட்டப்படும் என்ற செய்தி வெளியான நிலையிலும் காவல் உயரதிகாரிகளின் ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் போது, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களிடையே ஏதேனும் பிரச்னைகள் உருவானால் அதனை எப்படிச் சமாளிப்பது, உறுப்பினர்களை எப்படி வெளியேற்றிக் கொண்டு வருவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வுப் பணியை வடசென்னை கூடுதல் காவல் ஆணையாளர் ஸ்ரீதர், இணை ஆணையாளர் நிர்மல்குமார் ஜோஷி, பூக்கடை துணை ஆணையாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் ஆகியோர் சட்டப் பேரவைச் செயலகத்தை ஆய்வு செய்தனர்.