தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய பெரும்பான்மை பலம் இருந்ததால், அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது.
மெரினாவில் தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்கள் குறிக்கோள். வர்தா புயல், வறட்சி நிவாரண நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரைச் சந்தித்து தேவையான நிதியைப் பெறுவோம். நீட் தேர்வு சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும். இதையும் பிரதமரிடம் எடுத்துச்சொல்வோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். அதிமுகவை அழிக்க முற்பட்டவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.