திருத்தணி நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் காட்சிப் பொருளாக இருக்கும் நவீன எரிவாயு தகன மேடையை திறக்க வேண்டும்
என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை புதைக்க போதிய இட வசதி இல்லை.
மேலும், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நந்தி ஆற்றுக்கு சென்றுதான்
இறுதி சடங்குகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இந்நிலையில், நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, திருத்தணி அனுமந்தாபுரம் 13-வது வார்டு பகுதியில் உள்ள சுடுகாட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2012-13 ஆம் ஆண்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இது திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறக்க நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டாமல் காலம் கடத்தி வருகிறது.
எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.