செல்லிடப்பேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகையும், அதிமுக நிர்வாகியுமான சி.ஆர்.சரஸ்வதி சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.
இது குறித்த விவரம்: நடிகையும், அதிமுக நிர்வாகியுமான சி.ஆர்.சரஸ்வதி, அசோக்நகர் 4-ஆவது அவென்யுவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னுடைய செல்லிடப்பேசிக்கு சிலர் அடிக்கடி தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஆபாசமாகவும் பேசுகின்றனர். அவர்கள் வெளிநாட்டு தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி எண்களில் இருந்து வருவதால், அவர்களை எனக்குத் தெரியவில்லை.
இந்த மிரட்டலாலும், ஆபாச பேச்சினாலும் நான் மிகவும் மன வேதனை அடைந்து வருகிறேன். இதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளேன். என்னைப் போன்று முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.