மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான வாக்கெடுப்பு பிப்ரவரி 18-இல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்துமாறு திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதை பேரவைத் தலைவர் பி.தனபால் ஏற்காததால், பேரவையில் ரகளை- அமளி நடைபெற்றன. எனினும், எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பழனிசாமி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம் அருகிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியிலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் காஞ்சிபுரத்திலும் போராட்டம் நடைபெற உள்ளது.