தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த இரண்டு மான்கள், திருப்பூர் அருகே ரயில் மோதி புதன்கிழமை உயிரிழந்தன.
திருப்பூர் ரயில்வே காவல் எல்லைக்கு உள்பட்ட செம்மாண்டம்பாளையம் பகுதி அருகே, தண்டவாளத்தில் மான் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக, ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல்துறையினர், ரயிலில் மோதி உயிரிழந்த மானை மீட்டனர்.
இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பின்னர் வஞ்சிபாளையம் அருகே மற்றொரு மான் ரயிலில் மோதி உயிரிழந்து கிடப்பதாக, ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற ரயில்வே காவல் துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு, திருப்பூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் கூறியதாவது: வறட்சி காரணமாக வனப் பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் வன விலங்குகள் அங்கிருந்து வெளியேறுவதால், இவ்வாறான வன விலங்கு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றனர்.