பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகையையொட்டி, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) மாநகரில் தாற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவையை அடுத்த ஈஷா யோக மையத்தில் ஆதியோகியின் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். ஆகவே, அவர்களின் வருகையின்போது, விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை, சுங்கம் புறவழிச் சாலை, உக்கடம், பேரூர் புறவழிச் சாலை, செல்வபுரம் சிவாலயா சந்திப்பு, பேரூர் சாலை வழியாக வெள்ளிங்கிரி ஈஷா யோக மைத்துக்குச் செல்ல உள்ளதால் சுங்கம் புறவழிச் சாலை, செல்வபுரம் பேரூர் சாலை ஆகிய இடங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முக்கியப் பிரமுகர்கள் வரும்போது, உக்கடம் இணைப்புச் சாலையில் இருந்து புறவழிச் சாலையிலும், செல்வபுரம் சிவாலயா சந்திப்பிலிருந்து, தெலுங்குபாளையம் பிரிவு வரையிலும் சாலையோரங்களில் இரு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது. கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலைகளில் காலை 8 முதல் இரவு 9 மணி வரை எல் அண்டு டி புறவழிச் சாலை, போத்தனூர் நஞ்சுண்டாபுரம் சாலை, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.